cinema

img

உலகம் பார்த்த சினிமா - “சோக்ட்-பைசா போல்தா ஹை “

“தற்போது பயன்பாட்டில் உள்ள 500,1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் வங்கியில் நாற்ற மடிக்கும் கள்ளப் பணமாக உள்ள 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகள் வெளியேற்றப்படும்”-கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி, இந்த திடீர் அறிவிப்பு செய்கிறார். ஆனால் கள்ளப்பணம் ஒழிய வில்லை. மாறாக சொல்லெண்ணாத் துயரத்திற்கு, இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை தள்ளியது என்பதை, மும்பையிலுள்ள மூன்று நடுத்தர குடும்பத்தினை பின்னணியாக கொண்டு பேசுகின்ற ஹிந்திப்படமே, “சோக்ட்-பைசா போல்தா ஹை” சரிதா கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்று கிறார். கணவன் சுஷாந்த், கிடாரிஸ்ட் கலைஞன். நிரந்தர வேலை இல்லாதவன். மாதம் குறைந்தபட்சம் ரூபாய் 2000 சம்பாதிப்பவன். இவர்களுக்கு பள்ளி செல்லும் ஒரே மகன் சமீர். இவர்கள் மூன்று அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசிக்கின்றனர். தினேஷ் அவரது மனைவி அஞ்சும் தரை தளத்திலும், திருமதி டாய் அவளது திருமணமாகாத மகள் நீருவும் முதல் தளத்திலும், லோக்கல் எம்எல்ஏவின் தனி உதவியாளர் ராஜேந்திரா மூன்றாவது தளத்திலும் வசிக்கிறார்கள். அரசியல்வாதி ராஜேந்திரா தவிர்த்து, குடியிருப்பு வாசிகள் சந்தோசமாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு பொழுது போக்குகளில் ஈடுபட்டாலும்; அவர்களின் குணாம்சமான புறம்பேசுதல், பொறாமை கொள்ளுதல் ஆகியவற்றுடனே எல்லோரும் ஒன்றாகப் வாழ்கிறார்கள். சரிதா தனது காசாளர் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பவள். ஆனால் கணவன் சுஷாந்த் குடும்ப பொறுப்பற்றவனாக இருப்பதால் இவனை சரிதா மதிப்ப தில்லை. மேலும் சரிதா செயல்பாட்டு கவலை (Performance Anxiety)நோயால் பாதிக்கப்பட்டவள்.

இந்நோயால் இவளது பாடகிக்கனவு கைகூடாமல் உள்ளது. இதனால் யாருடனும் நெருங்குவதை தவிர்ப்ப வள். தனது மகன் சமீர் மற்றும் பிடிக்காத கணவனின் நலனை மட்டுமே மனதில் கொண்டு குடும்பத்தை நடத்துகிறாள். எம்எல்ஏ தனி உதவியாளர் ராஜேந்திரா வீட்டில், பணக்கட்டுகள் அடங்கிய சூட்கேஸ்கள் தூக்க முடியாமல் சிரமப்பட்டு அவரது வீட்டிற்கு அடிக்கடி எடுத்து வருவதை, குடியிருப்பு வாசிகள் அனைவரும் அறிவர்.  எடுத்துவந்த பணக்கட்டுகளை இவ்வீட்டில் மறைவாக வைக்க இடமில்லாமல், சுவரில் பொருத்தப்பட்ட முகத்தை அலம்புகின்ற சிறிய தொட்டியை இணைக்கும் கழிவுநீர் குழாய்க்குள் ரூபாய் 500 மற்றும் 1000 பணத்தாள்களை நெகிழி உறைக்குள் போட்டு, கம்பி வலைச் சல்லடையை பாதுகாப்பாக வைத்துக் பதுக்குகிறார்கள். இதனால், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மட்டும் கழிவுநீர் வெளியேறுவதில் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது. ஒரு இரவில் செயல்திறன் கவலை நோய் காரணமாக தூக்கம் வராத சரிதா, தண்ணீர் குடிக்க அடுப்படிக்கு செல் கிறாள். அங்கு முகம் அலம்பும் தொட்டியின் கழிவு நீர் குழாயிலிருந்து கழிவு நீரும், கூடவே நெகிழி உறைக்குள் 500 ‌ரூபாய் பணத்தாள்களும் வெளியேறி வருகிறது. சாக்கடை நீருக்குள் இருக்கும் இப்பணத்தை எடுக்க சங்கோஜப்படும் சரிதா, மூக்கை பொத்திக்கொண்டு எடுத்துப் பார்த்து சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்கிறாள். அங்குள்ள சாமி படத்தை பார்த்து நன்றியுணர்வோடு கும்பிடுகிறாள். இப்பணம் கள்ளநோட்டு இல்லை என்பதை மறுநாள் வங்கியின் கள்ளநோட்டு கண்டறியும் இயந்திரத்தில் சரிபார்த்து சந்தோசமடைகிறாள்.

இப்பணத்தை வைத்து சுஷாந்தின் சில கடன்களை அடைக்கிறாள். இதேபோல் முதல்மாடி, மற்றும் தரைத்தளத்தில் இருக்கும் மற்ற குடும்பங்களுக்கும் கழிவு நீர் குழாய் வழியாக பண நோட்டுகள் கிடைத்த வண்ணமாயிருக்கிறது. ஆனால் மூன்று குடும்பங்களும், இதைப்பற்றி ஒருவருக்கொருவர் வாய் திறக்காமல், எப்போதும் போல கஷ்டப் படுவதாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென ஒருநாள், மூன்றாவது மாடியில் இருக்கும் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து பணக்கட்டுகள் சூட்கேஸ் மூலமாக கீழே இறக்கப்பட்டு ஜீப்பில் எடுத்து செல்லப்படுகிறது.  இந்நிகழ்வு நடந்து ஒரிரு நாட்களில், பிரதம மந்திரி மோடி அவர்களால் 500,1000 ரூபாய் பணத்தாள்கள், நள்ளிரவு முதல் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இக்குடியிருப்பி லுள்ள குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கங்களையும், குறிப்பாக சரிதா, கணவன் சுஷாந்த் இருவருக்கு மிடையே யான உறவு சிக்குண்டதையும், பின்பு மீண்டதையும் மிக நுணுக்கமாக அலசுவதே மீதிக்கதை. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து சுஷாந்த் உள்ளிட்ட மத்தியதர வர்க்கத்தினர் சந்தோசத்தில் லுங்கி டான்ஸ் ஆடுகின்றனர். ஆனால், இந்தியா முழுவதும் பொதுமக்கள், கடும் வெயிலில் வங்கி மற்றும் ஏடிஎம் வாசல்களில் வரிசையில் காத்திருக்கும் காட்சிகளும், வங்கிப் பணியாளர்களின் கூடுதல் பணி அவஸ்தை களும், ஒருசேர ‌பின்னணி பாடலின் வழியாக காட்சி யாக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய மக்களில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டனர் என்ற உண்மையையே இப்பாடல் காட்சிகள் உரத்து கூவுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு அரசியல்வாதியின் வீட்டுக்கு சூட்கேஸ்,சூட்கேஸ்களாக பணம் மீண்டும் ஏறுகிறது. இப்போது கழிவு நீர் குழாயில் வருவது புதிய 2000 நோட்டுகளாகும்.  இந்நோட்டுக்களை கழிவு நீரில் திருட்டுத்தனமாக எடுக்கும் சரிதா, அதனைக்கொண்டு வீட்டுக்கான அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அழகுபடுத்தும்போது வரும் பின்னணி பாடலில், பணமே பாடுவதுபோல், “ஒவ்வொரு வரும் என் மீது ஆசைப்படுகிறார்கள்; ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருக்கும் ஆசை நான்; நானே நீதி; நானே சட்டம்;”என்ற வரிகளுக்கு இணையாக அமைக்கப்பட்டி ருக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். தனது மகளின் திருமணத்திற்காக முதல் தளத்தில் வசிக்கும் டாய், தான் கழிவுநீரில் எடுத்த செல்லாத பணத் தாள்களை சரிதாவின் வங்கியில் புதிய பணத்தாள்களாக மாற்றித் தர கெஞ்சுவாள். இதேபோல் தரைதளத்தில் வசிக்கும் தினேஷ், சுஷாந்துக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக, கழிவு நீரில் எடுத்த பழைய செல்லாத பணத்தாள்களை கொடுப்பான். சுஷாந்தும் இப்பழைய பணத்தாள்களை புதிய பணத்தாள்களாக மாற்றிட மனைவியிடம் உரிமை கோருவான். இவர்களுக்கெல்லாம் சரிதா தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி உதவுவாள். ஆனால் தனது கணவனுக்கு கடனளித்த ரவுடிக்கு இதேபோல் செல்லாத பணத்தை கமிஷனுக்கு மாற்றித் தர மறுப்பதோடு, அவன் கொடுத்த 50000 ரூபாய் பழைய பணத்தாள்களை திருப்பிக் கொடுக்கமாட்டாள்.

முரண் நிறைந்த பாத்திரமாகவும், புரியாத புதிராகவும் சரிதா படைக்கப்பட்டுள்ளாள்.  சுஷாந்துக்கு கடன் கொடுத்த ரவுடி,சரிதாவை மிரட்டி தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்வதை,பக்கத்து வீட்டு வயதான பெண்மணி போனில் வீடியோ எடுப்பாள். இது குடியிருப்பில் வைரலாகும்.தினேஷிடம் இதுகுறித்து சுஷாந்த் பேசுகையில், அவன் சுஷாந்தை ஏதாவது வேலைக்கு போகச் சொல்கிறான். மேலும் வேலை இல்லாதவனின் மூளையில் பிசாசு தான் கொலுவேற்கும், எனக்கூறுவது; வேலை வெட்டி இல்லாதவனே மனைவியை சந்தேகப்படுவான் என்ற கருத்தை மிக அழுத்தமாக சித்தரிக்கிறது. மூன்று நாட்களாக ரொட்டியுடன் சாப்பிட உருளைக் கிழங்கு மட்டுமே சமைத்த மனைவியை சுஷாந்த் கண்டிக் கின்றபொழுது, தொலைக்காட்சியில், “பிரதமர் மோடி காளான்கள் சாப்பிடுவதால் சுறுசுறுப்பாகவும், திடமான உடல் வாகுடன் இருக்கிறார். அதனால் நீங்களும் காளான் சாப்பிடுங்கள்” என்ற விளம்பரம் வருவது நகைமுரணாகும்.  நள்ளிரவுக்குள் பழைய செல்லாத பணத்தாள்களைக் கொடுத்து புதிய பணத்தாள்கள் பெறுவதற்கான கெடு ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. இதையறிந்த சரிதா, இதுவரை கழிவுநீரில் எடுத்த பணத்தாள்களை மொத்தமாக மாற்ற, வங்கிக்கு திருட்டுத்தனமாக எடுத்து வருவாள். அன்று வங்கியில் முகமூடிக் கொள்ளை யர்கள் புகுந்து கொள்ளையடிப்பர்.அதில் இவளது கழிவுநீர் பணமும் கொள்ளையடிக்கப்படும். பணபலமிக்க அரசியல் வாதிகளையும்; செல்வாக்கு மிக்க அதிகார வர்க்கத்தையும்; கார்ப்பரேட் முதலாளி களையும்; இதில் வரும் முகமூடி கொள்ளையர்களோடு உருவகப்(metaphor)படுத்தியுள்ளார் இயக்குநர். மூன்றா வது தளத்தில் உள்ள அரசியல்வாதியை குவிமையம் இல்லாத மங்கலான தோற்றத்திலே காட்டப்படுவதும் ஒரு குறியீடு. இதேபோல் அரசியல் வாதியின் வீட்டுச்சாவியை திருட்டுத்தனமாக எடுத்து, புதிய 2000ரூபாய் பணத்தாள்களை ஒரு பெண் திருடுகின்ற காட்சியும் குவிமையம் இல்லாத மங்கலான தோற்றத்திலே காட்டப்படும். இப்பெண் சரிதாவா அல்லது டாய்யா என்பதையும் பார்வையாளர் களின் யூகத்திற்கே விடப்படுகிறது. சாதுவான சரிதாவுக்கு, எதிர்பாராமல் சாக்கடையிலிருந்து பணம் கிடைக்குமாயின், அவள்சரளமாக பொய் பேசுவதும்,யாரையும் மதிக்காத போக்கும், தானென்ற அகந்தையையும் அது உருவாக்கும். ஆனால் எதார்த்தம் இதனை நொடியில் மாற்றும் என்பதை சரிதா பாத்திரப்படைப்பு வெகு இயல்பாக சித்தரித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்நடவடிக்கை தெரிந்திருப்பதையும், இதனால் இவர்கள் சுதாரித்து வங்கி அதிகாரிகளோடு கள்ளக்கூட்டு வைத்து புதிய பணத்தாள்களை பெற்றதும், மத்திய தர வர்க்கம் பட்ட பாடுகளையும் இப்படம் அப்பட்டமாகப் பேசுகிறது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கள்ளப்பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் தருவேன் என்று 120 கோடி மக்கள் ஏமாற்றப் பட்டது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் அவல நகைச் சுவை. நவம்பர் 8 இந்தியாவின் முட்டாள்கள் தினமாகி விட்டது என்பதை இப்படம் ஆவணப்படுத்துகிறது. படத்தின் பின்னணி இசை மெச்சும்படியாக இல்லை. நாயகி சரிதாவாக நடித்துள்ள சையாமிகேர், வேலைவெட்டி இல்லாக் கணவனை மதிக்காத போக்காகட்டும்; கணவன் தன்னை சந்தேகப்படுகிறான் என்பதை அறிந்தும், அறியாத மாதிரி இருப்பதாகட்டும்; ஒட்டுமொத்த குடும்பத்திற்காக உழைப்பதாகட்டும்; வங்கிப் பணியாளராக பணியாற்றுவதாகட்டும்; அனைத் திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.அபார நடிப்பு. கணவனாக ரோஷன் மாத்யூ சிறப்பாகவே நடித்துள்ளார். இன்றைக்கும் பாலிவுட் மற்றும் மலையாள ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் அனுராக் காஷ்யபே இப்படத்தை இயக்கியுள்ளார்.